சாமியார் சிவசங்கர் பாபா பள்ளியில், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று தாக்கல் செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை  அமைக்கப்பட்டு, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 பின்னர், அவரை இரவவோடு இரவாக சென்னை அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், இந்த வழக்கில் அடுத்த திருப்பமாக, “கடந்த 2010-12 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல் துறையினர், போக்சா சட்டம் மற்றும் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் எங்களையும் சேர்த்துள்ளதாகவும்” சிபிசிஐடி காவல் துறையினர் மீது புகார் கூறியிருந்தனர். 

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

“இந்த வழக்கு விசாரணையில் பதிவான மேலும் 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாகவும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, “ 3 வழக்குகளின் முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் 5 ஆம் தேதி திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.