தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பாஜகவினரின் இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று (நவம்பர் 5) விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையின் போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் கொரோனாவின் 2 வது, 3 வது அலை தாக்கம் தெரியக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இந்த நிராகரிப்பை செய்வதாக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த கட்ட வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேலும் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், தடை கோரிய மனு மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. 

வழக்கின் முடிவு, தங்களுக்கு சாதகமாக வராதத்தை தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் வேல் யாத்திரைக்கு  தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

அதன்முடிவில், கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரை நடக்கும் என கூறிய எல்.முருகன் சென்னையில் இருந்து இன்று காலை திருத்தணி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரிடம், முருகனை தரிசிப்பது எனது உரிமை என பதில் அளித்து விட்டு சென்றார் எல்.முருகன்.

அதேநேரம், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இந்த நிலையில், சென்னையில் இருந்து யாத்திரை தொடங்க உத்தேசித்துள்ள பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் வெள்ளிக்கிழமை காலையில் திருத்தணி நோக்கி புறப்பட்டனர்.

கையில் வேலை ஏந்தியவாறு தொண்டர்கள் சூழ வேல் யாத்திரைக்காக பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட வேனில் முருகன் சென்றார்ர். கொரோனா தொற்று காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்த போதிலும், சமூக இடைவெளியின்றி கூட்டத்தில் செல்பவர்கள் நெருக்கமாக இருந்தபடி ஊர்வலத்தில் பாஜகவினர் சென்றனர்.

இந்நிலையில், வேல் யாத்திரை இன்னும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, அனுமதி அளிக்குமாறு மீண்டும் நீதிமன்றத்தை பாஜக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று (நவம்பர் 10) விசாரணைக்கு வந்தபோது, வேல் யாத்திரை கோவில் யாத்திரை அல்ல, அது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை என தமிழக டிஜிபி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது அந்த வழக்கு. அதில்தான், டிஜிபி தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், வேல் யாத்திரையின்போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'பாஜக தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முகக்கவசம் அணியவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. யாத்திரையில் பங்கேற்போர் ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை. 

பல இடங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். அவர்கள் பேப்பரில் கொடுத்ததும், நீதிமன்றத்தில் சொல்வதும் வெவ்வேறாக உள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 கிலோமீட்டருக்கு குறைவாகவே அவர்கள் சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே' என வாதிடப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.