கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் ப்ளீஸ்! - கவிஞர் வைரமுத்து
By Aruvi | Galatta | 03:25 PM
கருணாநிதியோடு ஸ்டாலினை ஒப்பிட வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை பாரிமுனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கத் திராவிட சித்தாந்தத்தைப் பரப்பத் தொடர்ச்சியாக ஆள் வேண்டும் என்று எதிர்பார்த்தபோது, காலம் ஸ்டாலினை அனுப்பி உள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, “கருணாநிதிக்குப் பிறகு கட்சி சிதறும் என்றார்கள், ஆனால் சிதறவில்லை, உடையவில்லை. ஸ்டாலின், அவரது பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். கருணாநிதி உடன், ஸ்டாலினை ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள். யாரையும், யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்த ரோஜா வேறு, இந்த ரோஜா வேறு. கருணாநிதி உயரம் வேறு, ஸ்டாலின் உயரம் வேறு. இரண்டும் வெவ்வேறு சிகரம்” என்றும் புகழ் மாலை சூடினார்.
மேலும், “நான் அறிந்த வகையில், தமிழக அரசியலில் கருணாநிதி குடும்பத்தைப்போல அதிகம் துன்புற்ற குடும்பம் எதுவும் இல்லை.
கருணாநிதி சொல்லிவிட்டுச் செய்து முடிப்பார். ஸ்டாலின் செய்து முடித்துவிட்டுச் சொல்லுவார். கருணாநிதி மறப்பார், மன்னிப்பார். ஸ்டாலின் மன்னிப்பார், ஆனால் மறக்கமாட்டார்.
திமுகவிற்கு கூட்டணி முக்கியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதை முடிவெடுக்க வேண்டிய நிலையில், தற்போது கட்சி உள்ளது. ஆனால், திமுக திமுகவோடு கூட்டணி வைத்துள்ளதைத் தொண்டர்கள் உறுதிப்படுத்தினால், ஸ்டாலின் தான் மகுடம் சூடுவார்” வைரமுத்து புகழாரம் சூட்டினார்.