வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

vaikunda Ekadasi

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கமாக மார்கழி மாதம் தான் நடத்தப்படும். 19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் போது, தினமும் நம்பெருமாள் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம்.

அதனைத்தொடர்ந்து இதேபோல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு  நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை,  கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக  சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். ஸ்ரீரங்கத்தில் மட்டுமே இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவை காண்பதற்காக பக்தர்கள் உலகெங்கும் இருந்து ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். கோயிலை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு 2000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.