ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

covid

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவை வெல்லும் பேராயுதமான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல் ஜனவரி 10-ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பேட்டி அளித்தார்.
சென்னை அடையாறு மசூதி காலனியில் நடந்த 16-வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜனவரி 3-ம் தேதியே இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை சைதாப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்க இருக்கிறோம். மேலும் அன்றே தமிழகம் முழுவதும் 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும். அதேபோல் தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் பேருக்கும் முன்கள பணியாளர்கள் 9 லட்சத்து 78 பேருக்கும் ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் பொது இடங்களில் முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படும். கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை செலுத்திக்கொள்ளலாம் என்பதால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவேக்சினை பொறுத்தவரை 29 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. ஜனவரி 3-ம் தேதி வரை 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் செலவாகிவிடும். மீதி 22 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்தவகையில் தமிழகத்தில் 33 லட்சம் பேர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே இன்னும் கூடுதலாக 10 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். முழுவீச்சில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கப்படும். தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 34 லட்சத்து 60 ஆயிரத்து 758 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 84.87 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 55.85 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். கையிருப்பில் 80 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. மேலும் ஏறத்தாழ 95 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் என இருக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் தயக்கம் இல்லாமல் 2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். 78 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர் உள்ளனர். சென்னையில் முதல் தவணை தடுப்பூசியை மாநில அளவிலான சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக 89 சதவீதம் பேருக்கும் 2-வது தவணை தடுப்பூசியை மாநில அளவிலான சதவீதத்தை காட்டிலும் கூடுதலாக 66 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 34 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் ஒமைக்ரான் அறிகுறி என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் தமிழகம் முதல் மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது. அதன்படி 6 லட்சத்து 18 ஆயிரத்து 700 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.