சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி! 15 பேர் படுகாயம்
By Arul Valan Arasu | Galatta | 02:02 PM
சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் மாவட்டம், மொகமதாபாத் பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட, ஒரு வீட்டில் இன்று காலை திடீரென்று பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது.
இதில், அந்த 2 மாடிகள் கொண்ட வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. சிலிண்டர் வெடித்தும், வீடு இடிந்து விழுந்தும் சுமார் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, போலீசார் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிரமாக சிகிச்சகை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சிலிண்டர் வெடித்தது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தர பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.