பருவமழையை பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவு: கமல்ஹாசன்
பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவு என்று செய்தியாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டனர்.
மேலும் அவர்களை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னை தரமணியில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொட்டி, அரிசி போன்ற உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது : பருவமழை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவே அதற்காக அரசு மீது தவறு இல்லை என்று நான் கூறவில்லை அரசு மீதும் தவறு உள்ளது என கூறினார்.
மேலும் அரசு மீது தவறு இல்லாமல் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் ஆனால் தனி மனிதர்களுக்கும் பொறுப்புள்ளது என்றும் இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமித்தலைக் குற்றமாகக் கருதி நாமும் அதை செய்யாமலிருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில் பேரிடர்க் காலத்தில் நாங்கள் உட்பட அனைவரும் வந்து உதவி செய்கின்றோம் மேலும் மக்கள் சேவை செய்யும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.