“கோடநாடு கொலை வழக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக” எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே
குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். 

அப்போது, “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக” எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 
அப்போது, “அதிமுகவினர் மீது, திமுக அரசு பொய் வழக்கு போடுவதாகவும்” ஆளுநரிடம் அவர்கள் முறையிட்டனர். ஆளுநருடனான இந்த சந்திப்பின் போது, 

கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

ஆளுநருடனான இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்று திமுக அரசு செயல்பட்டு வருகிறது” என்றும் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே திமுக அரசு வழக்கு போட்டுள்ளது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

“அதிமுக அரசு இருக்கும் போது, சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டன என்றும், அதை வைத்து இப்போது வழக்குத் தொடர்கிறார்கள் என்றும், அது வண்மையாக கண்டிக்கத்தக்கது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

“தேர்தல் வாக்குறுதியாகக் கோடநாடு வழக்கு மறு விசாரணை செய்யப்படுவதாக முதலமைச்சர் கூறுவதை ஏற்க எங்களால் ஏற்க இயலாது” என்றும், எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அத்துடன், “கோடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடையும் தருணத்தில் இருக்கும் போது, திமுக அரசு, அதனைப் புதிதாக விசாரிக்க வேண்டுமென்று கூறுகிறது என்றும், தேர்தல் வாக்குறுதி அளித்ததற்காகவெல்லாம் இதனை விசாரிக்க முடியாது என்றும், இதை சட்டப்படி செய்ய வேண்டும்” என்றும், அவர் பேசினார்.

மேலும், “கோடநாடு கொலை வழக்கில் மறுவிசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், கேரளாவை சேர்ந்த குற்றப்பின்னணி கொண்ட சயான் உள்ளிட்டவர்களுக்கு திமுக ஆதரவு அளிப்பது ஏன்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

“சயான் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர் என்றும், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் சயானிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது” என்றும், அவர் கூறினார்.

“கொடநாடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மறு விசாரணை ஏன் நடத்த வேண்டும்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

“100 நாள் வேலை திட்டம் முறையாகச் செயல்படவில்லை என்றும், திமுக அரசு முடக்கியுள்ளது என்றும், ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை” என்றும், அவர் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, “திமுக அரசின் 100 நாட்கள் சாதனைகளில் மக்கள் வேதனை அடைந்து உள்ளார்கள் என்றும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை தற்போதைய அரசு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

முக்கியமாக, “தமிழகத்தில் நிலவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை திமுக அரசு குறைத்துக் காட்டுகிறது” என்றும், எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். -