“தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த திட்டம் உள்ளதாகவும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அறிக்கை பரிசீலனையில் இந்த திட்டம் உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், (1.4.2003 முதல் ) புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்றும், அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

அதாவது, கடந்த கால அதிமுக ஆட்சியில் மிகச் சரியாக கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதனால், தமிழக அரசு ஊழியர்கள் சுமார் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பாதிக்கு ஆளானர்கள். 

ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அவர்களுக்கு ஓய்வூதியமாகவும், அவர்களுக்கு பின்னர் அவர்களின் துணையாருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், “புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என அறிவிக்கப்பட்டதால், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்” என்றும், கூறப்பட்டது.

இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல், இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். 

இதனால், இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அதிமுக அரசு கொண்டு வந்த இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில், “பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது” என்பதால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அன்று முதல் தற்போது வரை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர். 

அத்துடன், “மேற்குவங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தன.

மேலும், “கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும்” அறிவித்து உள்ளன. 

இதே போல், “தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் “தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என்றும், கூறப்பட்டு இருந்தது. 
இந்த நிலையில் தான், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. 

அப்படி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், “இதற்கு முந்தைய தமிழக அரசால் மறுக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்த திட்டத்தை அரசுப் பணியாளர்கள் விரும்பாத நிலையே தற்போது வரை இருந்து வருகிறது என்றும், இதனால் தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது, 12 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத நிலுவை கோரிக்கையாகவே இருந்து வருகிறது” என்று, வலியுறுத்தி இருந்தது.

இதனால், “தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு முதல்வர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிப்பு செய்து 20 ஆண்டுகளாக நிலுவையாக இருக்கும் கோரிக்கையை நிறைவேற்றி பணியாளர்களின் நலன் காக்க வேண்டும்” என்றும், அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

தற்போது,  தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எழுதப்பட்ட இந்த கடித்திற்கு பதில் அளித்து உள்ள நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், “தங்களின் கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால், அது தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதன் படி, “1.4.2003 அன்றோ, அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது அறிக்கையினை தமிழக அரசிடம் அளித்து உள்ளது என்றும், அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில், அரசாணைகள் வெளியிடப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்றும், அதில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.