தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், “ஏன் உயர்த்தப்பட்டது?” என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு நேற்றைய தினம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 வது நிதி ஆணையமானது, தனது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும்” என்றும், நிபந்தனைகள் விதித்து உள்ளதை குறிப்பிட்டு உள்ளது.

அதன்படி, “தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுவதாகவும்” தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

அந்த வகையில், “600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுவதாகவும், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுவதாகவும்” அதில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், “1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது என்றும். 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது” என்றும், தெரிவித்து உள்ளது.

மேலும், “தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும்” உயர்த்தப்படுகிறது. 

அதே போன்று, “பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23 ஆம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.”

குறிப்பாக, “பொருளாதார குறியீடுகள் உயர்ந்து உள்ள நிலையில், சொத்து வரியில் பல ஆண்டுகளாக எந்த உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில், சொத்து வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செலவீனம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும்” தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

முக்கியமாக, “இந்தக் காரணங்களின் அடிப்படையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாக” தமிழ்நாடு அரசு, விளக்கம் அளித்து உள்ளது” குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “சொத்துவரி உயர்வு போல் பல பம்பர் பரிசு காத்திருக்கிறது” என்று, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார்.