2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. கலந்தாய்வின் தொடக்கமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. நேற்று தொடங்கிய இந்த கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. 

கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு, மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றை கருத்தில்கொண்டு அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியபடி கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தங்களுடைய விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

கலந்தாய்வுக்கு முன்னராக, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில்  இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 34 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வையே ஆள்மாறாட்டம் செய்து எழுதினார்கள்; அதுவும் அதிமுக ஆட்சியிலேதான். அப்படி எழுதியவர்களில் சிலர் ஆதார் எண் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆள்மாறாட்ட மோசடியையே கைகழுவிவிட்டது அதிமுக ஆட்சி. நீட் தேர்வில் வேறு மாநிலத்தவர், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இங்கும் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் எடப்பாடி அதிமுக ஆட்சியிலேதான்.

ஆகவே 2020-2021ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் - பிடிஎஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கடுமையான குற்றச்சாட்டோடு, அரசுக்கு கோரிக்கையும் வைத்தார் மு.க.ஸ்டாலின்

மற்றொரு பக்கம், ''ஏற்கெனவே மத்திய அரசு தொகுப்புக்கு 15% இடங்களைக் கொடுத்துவிட்டோம். இனி இருப்பதைத் தமிழக மாணவர்களுக்கே வழங்க வேண்டும்'' என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் அரசியல் தலைவர்கள் பலரும், தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்துத் தகவல் வெளியானதை அடுத்து, மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்யவும், அவர்கள் விவரங்களைச் சரிபார்த்து முறைகேடு எதுவும் நடக்காமல் ஆய்வு செய்யவும் 5 மருத்துவர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பராசக்தி, செல்வராஜ், ஆவுடையப்பன், இந்துமதி, ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.