“மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியே, அக்டோபர் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக” பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோன 2 வது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தமிழக அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு முறைகளின் படி தற்போது வகுப்புகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அத்துடன், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கியதிலிருந்து வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதால், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பொது விடுமுறையை தொடர்ந்து வரும் சனிக்கிழமையான வரும் 16 ஆம் தேதி அன்று, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, “ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 14, 15 ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், வரும் சனிக் கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும்” என்று, ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று காலை முதல் ஆலோசனை நடத்திய நிலையில், “ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை மற்றும் அவர்களின் நலன் கருதி வருகின்ற 16 ஆம் தேதி சனிக் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக” பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர்” என்றும், குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இவற்றுடன், “கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலை தூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், இந்த சூழுலில் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், வார இறுதி நாளான 16 ஆம் தேதி சனிக் கிழமை அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் 16 ஆம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, முன்னதாக “காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்றும், டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகவும்” அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.