கொரோனா வைரஸ் காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பண்பாட்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதற்கென்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்து உள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து இந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர்” என்று, குறிப்பிட்டுள்ளது. 

மேலும், “ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாகக் கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்” என்றும், கூறியுள்ளது.

“ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, வரும் 2021 ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது” என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன் படி, 

- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. 

- எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

- மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

- பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என 
சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். அதாவது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

- நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது. 

- இது தொடர்பான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.