“யாராலும் திருட முடியாத சொத்து கல்வி மட்டுமே, அதை நீங்கள் மறந்து விடக்கூடாது” என்று, பள்ளி மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான துவக்க விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் லேடி வெலிங்டன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வாகனங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து முன்னதாக தொடங்கி வைத்தார். 

அந்த வகையில், தமிழக அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 557 பள்ளிகளிலும் புதிய மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

அதே போல், இந்த மேலாண்மை குழுவில் பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்  உள்பட பலர் இடம் பெற உள்ளனர். 

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் முன்பு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பள்ளிப் பருவம் திரும்பக் கிடைக்காத மகிழ்ச்சி. மனநிறைவு, மகிழ்ச்சியான கொண்டாட்டம் கொண்டது இந்த பள்ளிப் பருவம்” என்று, குறிப்பிட்டார். 

“இத்தகைய பள்ளி பருவத்தை அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்” என்றும், சூளுரைத்தார். 

“உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது, திருட முடியாத சொத்து என ஒன்று உண்டு என்றால், அது உங்களின் கல்வி மட்டும் தான்” என்றும், முதல்வர் சூளுரைத்தார்.

அத்துடன், “கல்வியை யாராலும் திருட முடியாது என்றும், அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றும், எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் அந்த அளவு கல்விக்காக இந்த அரசு மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது” என்றும், தெரிவித்தார்.

மேலும், “கல்வி எனும் நீரோடை சீராக செல்ல மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் எண்ணம் ஒரே சீராக அமைந்திருக்க வேண்டும்” என்றும், முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “பெற்றோர் உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதற்கு தடைபோராமல், தடங்கள் செய்யாமல் வழிகாட்டுங்கள், உதவுங்கள்” என்று, பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார். 

முக்கியமாக, “பெற்றோர் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணித்து விட வேண்டாம்” என்றும், பள்ளி மாணவர்களின் பெற்றோரை முதல்வர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

“மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பதை குறிக்கோளாக கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்பட வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், “அரசு பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

மிக முக்கியமாக, “பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது” என்றும், பெருமிதத்தோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.