“தமிழ்நாட்டில் பச்சை தமிழர்கள் இருப்பதைப் போலவே, தோனி மஞ்சள் தமிழன்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கில் சற்று முன்பாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த விழாவில், சென்னை அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழாவில், கேப்டன் தோனி உள்ளிட்ட சென்னை அணியின் வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகத்தினர் என அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த விழாவில், சென்னை அணிக்காக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் கேப்டன் தோனிக்கு, சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை, கேப்டன் மகேந்திர சிங் தோனி வழங்கி கௌரவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசும்போது, “சென்னையில் தான் எனது கடைசி T20 ஆட்டத்தை விளையாடுவேன்” என்றும், மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

அதன் தொடர்ச்சியாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் இங்கு முதலமைச்சராக வந்திருந்தாலும், கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாகவே வந்திருக்கிறேன்” என்று, ஸ்டாலின் பேசத் தொடங்கியதுமே, அரங்கத்தில் இருந்த ரசிகர்களின் ஆராவாரமாய் கைத்ட்டி விசில் போட, அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது. 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் தோனியின் ரசிகராக இங்கு வந்துள்ளேன். எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர் தான்” என்று, பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அத்துடன், “சென்னை என்றாலே சூப்பர்தான், மீண்டும் ஒரு முறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் கூறினார்.

அதே நேரத்தில், “நான் இந்த விழாவில் கலந்து கொண்டாலும் தமிழகத்தின் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்தே நான்  சிந்தித்து கொண்டிருக்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள்” என்று, தோனியை வெகுவாக பாராட்டி பேசினார். 

“நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் தான். சென்னை மேயராக இருந்த போது, போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்.  கபில் தேவுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தது தோனி தான்” என்றும், முதலமைச்சர் புகழராம் சூட்டினார். 

தோனியின் சொந்த ஊர் ராஞ்சியாக இருந்தாலும், தமிழகத்தின் செல்லப் பிள்ளையாக தோனி மாறிவிட்டார்” என்று புகழ்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழர்கள் பச்சைத் தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர்” என்றும், நெகிழ்ச்சியுடன் புகழ்ந்து பேசினார்.

குறிப்பாக, “தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை யாராலும் மறக்க முடியாது, டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் தோனி தான் என்றாகிவிட்டது” என்றும், முதலமைச்சர் புகழ்ந்து பேசினார். 

“ஐபிஎல் போட்டியில் தனது ஆளுமையை நிலை நிறுத்திக்கொண்டவர் தோனி என்றும், ஒரு அணியை உருவாக்கியவர் தான் சிறந்த ஆளுமையாக அறியப்படுவார் ஆளுமைத் திறன் கொண்டவராக தோனி இருப்பதால் தான் அனைவராலும் தோனி பாராட்டப்படுகிறார்” என்றும், முதலமைச்சர் புகழ்ந்து பேசினார்.

முக்கியமாக, “எப்போதுமே இலக்கு தான் முக்கியம், அதை அடைய உழைப்பு தான் முக்கியம், இலக்கும் உழைப்பும் ஒன்று சேர்ந்தால் யாராலும் வீழ்த்த முடியாது. அது அரசியலுக்கும் பொருந்தும்.  நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள், நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடர்கிறோம். இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோனிக்கு நெகிழ்ச்சி பொங்க புகழாரம் சூட்டினார்.