“வள்ளலார் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

“ஆன்மிகத்தில் சிறந்து விளங்கி, மனத நேயம் வளர்த்த மாபெரும் மனிதன் வள்ளலார்!”

“பசிப்பிணிதான் மனிதனுக்கு பெரும்பிணி, ஆதலால் பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம் என்று எண்ணி, நாள்தோறும் அணையாத அடுப்பெரிய செய்து காலமெல்லாம் அன்னதானம் அளிக்கும் அரும்பணியை தொடங்கிய அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், 'வள்ளலாரின் பிறந்த நாள் இனி 'தனிப்பெங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அருட்பிரகாச வள்ளலார்‌ என்று அழைக்கப்படும்‌ இராமலிங்க அடிகளார்‌, கடலூர்‌ மாவட்டம்‌ சிதம்பரத்திலிருந்து 10 மைல்‌ தொலைவில்‌ உள்ள மருதூரில்‌ கடந்த 5.10.1823 ஆம் ஆண்டு பிறந்தார்‌. கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக்‌ கொண்டு வாழ்ந்தார்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“அனைத்து நம்பிக்கைகளிலும்‌ உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும்‌ வண்ணம்,‌ இவர்‌ சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவி, ‌வடலூரில்‌ சத்தியஞான சபையை எழுப்பினார்‌” என்றும், கூறியுள்ளார். 

“ 'வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடினேன்‌' என்று பாடிய இவர்‌, மக்களின்‌ பசித்துயர்‌ போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார்‌ என்றும், அவர்‌ ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல்‌ தொடர்ந்து எரிந்த வண்ணம்‌ பசியோடு இருக்கும்‌ மக்களின்‌ வயிற்றை நிரப்புகிறது” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார். 

“மனுமுறை கண்ட வாசகம்‌, ஜீவகாருண்ய ஒழுக்கம்‌ ஆகிய உரைநடைகளை அவர் எழுதினார் என்றும், இவர்‌ பாடிய பாடல்களின்‌ திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது என்றும், இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

“திருவருட்பா ஆறாம்‌ திருமுறையில்‌, எந்தச்‌ சமயத்தின்‌ நிலைப்பாட்டையும்‌ எல்லா மத நெறிகளையும்‌ சம்மதம்‌ ஆக்கி கொள்கிறேன்‌ என்றார்‌. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்‌ நிறுவிய அவர்‌, சத்திய தருமச்சாலையையும்‌, சித்தி வளாகத்தையும்‌ உருவாக்கினார்‌” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“பசிப்பிணி நீக்கும்‌ மருத்துவராக வாழ்ந்து காட்டினார்‌ என்றும், அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும்‌ அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. 

அவர்‌ பிறந்தநாளான அக்டோபர்‌ 5 ஆம்‌ நாள்‌ இனி, ஆண்டுதோறும்‌ 'தனிப்பெருங்கருணை நாள்‌' எனக்‌ கடைப்பிடிக்கப்படும்‌ என்று அறிவிக்கப்படுகிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறித்து உள்ளார்.