“சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லா தமிழகம் இது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் பெருமிதத்தோடு பேசியது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

தமிழக சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து பேசினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும்” என்று, குறிப்பிட்டார். 

“சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான், மாநில வளர்ச்சி சரியாக இருக்கும்” என்றும், பேசினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச் சூடுகளும் இல்லை” என்று, பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மேலும், “காவல் துறை என்பது, குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்” என்றும், முதல்வர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “தமிழகத்தில் தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு, இந்த ஆட்சியில் இடமில்லை என்றும், காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதல்வர் சூளுரைத்தார். 

குறிப்பாக, “தமிழகத்தில் ஓரிரு சம்பவங்களை வைத்து, காவல் துறையை விமர்சிக்க வேண்டாம் என்றும், காவலர்கள் மீது அரசுக்கு முழு அக்கறையும் உள்ளது” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் அனைவரும் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“காவல் துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும் என்றும், நமது அரசின் நோக்கம் குற்றத்தை தடுப்பதே ஓராண்டில் காவல் துறை மீதான  மக்களின் நம்பிக்கையை மீட்டு உள்ளோம்” என்றும், அவர் கூறினார். 

“இது நம்ம போலீசார் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது என்றும், குற்றங்களை தடுக்க முன்னுரிமை என அறிவித்து செயல்படுத்துகிறோம்” என்றும், அவர் பேசினார்.

“விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது என்றும், விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

முக்கியமாக, “போலீசார் யாரும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விசாரணையில் காட்டக் கூடாது” என்றும், முதல்வர் அறிவுறுத்தினார். 

மிக முக்கியமாக, “விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை போலீசார் முறையாக பின்பற்ற வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.