தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு  இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

p1

அவ்வகையில் 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

p2

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள போதும் முன்கூட்டியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை கொரோனா முடக்கம் காரணமாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட இம்முறை அதிக பொருள்கள் வழங்கப்பட்டாலும் 2,500 ரூபாய் பணம் வழங்கப்படவில்லை என குறிப்பிடத்தக்கது.