இன்று நடைபெற்ற காணொலி காட்சி வழியான கல்லூரி பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

``உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம். மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில், உயர்கல்வி வழங்கும் கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன

அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம். எனவே, அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளையும், விலையில்லாப் பொருள்களையும் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் ஏழை மாணவர்களும் உயர்கல்வி கற்கும் சூழலை உருவாக்கி உள்ளோம. இன்னும் 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளுக்கு உட்கட்டமைப்புக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் விகிதம் தமிழகத்தில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது"

என்று கூறி பெருமிதப்பட்டார்.

இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் GER (Gross enrollment ratio) -ல் தமிழகம்தான் முதலீடும் வகிக்கிறது. பல உலக நாடுகளை விட தமிழகம் இதில் முன்னோடியாக திகழ்கிறது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வர நிறைய காரணங்களை சொல்கிறது. அதில் முக்கியமான ஒரு காரணம், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது. 2035க்குள் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை 50% ஆக உயர்த்துவது என்ற இலக்கு. இந்த எண்ணிக்கையை, தமிழகம் இப்போதே 99 சதவிகிதம் அடைந்துவிட்டது.

மற்ற மாநிலங்களின் நிலை என்று பார்த்தால் கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர் 37% ஆக உள்ளது. அது போக டெல்லியில் அதிகமாக ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலுங்கானாவில் இது 36.2% ஆக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் இது 32.4% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஜிஇஆர் சதவிகிதம் 32 ஆக உள்ளது. கர்நாடகாவில் இது வெறும் 28%தான்.

இந்தியாவின் மொத்த ஜிஇஆர் சதவிகிதம் 28%தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் மாநிலங்களை தமிழகம் முந்தியது மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழகம் இதில் முந்தி இருக்கிறது. சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43% ஆனால் தமிழகத்தின் சதவிகிதம் 49. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழகம் முன்னோடியாக உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக, எல்லா வருடமும் இந்த சதவிகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது . அதாவது தமிழகத்தில் ஜிஇஆர் சதவிகிதம் அதிகரிப்புதான் மற்ற மாநிலங்களில் அதிகரிக்கும் சதவிகிதத்தை கூடுதல் ஆகும். போக தமிழகம் இதில் விரைவில் 50% என்ற இலக்கை தாண்டும் என்று கூறுகிறார்கள் . பிற மாநிலங்கள் இந்த இலக்கை தொட குறைந்தது 10 வருடங்கள் ஆகுலாம் என கணிக்கப்படுகிறது.