நெல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகர்கோவிலை சேர்ந்த சண்முகசுந்தரமும் அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.  

இன்று காலை சுமார் பத்தரை மணியளவில் நெல்லை - மதுரை நான்கு வழிச்சாலையில் அந்த கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக சென்றது. 

பின்னர் நான்கு வழிச் சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

ACCIDENT NELLAI

நெல்லை ரெட்டியார்பட்டி அருகே நடந்த  இந்த சம்பவத்தில் கார் மோதியதும், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் நெல்லை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவியரான தென்காசி மாவட்டம் ஆவுடையானுரைச் சேர்ந்த பொன் திவ்ய காயத்ரி (21), மதுரை பரசுராமன்பட்டியைச் சேர்ந்த பிரீடா  ஏஞ்சலின் ராணி (23)  ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்ட இடத்திலேயே உயிரிழந்தனர். 

இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான  சண்முகசுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த கடையநல்லூரைச் சேர்ந்த மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவி திவ்யபாலாவும், காரில் வந்த சண்முகசுந்தரத்தின் நண்பர்கள் மூவரும் படுகாயமடைந்தனர்.

NELLAI ACCIDENT

காயமடைந்தோர் 108  ஆம்புலன்ஸில் கொண்டு சென்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாநகராட்சி ஆணையர் சுரேஷ் குமார் உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவரும் தலைக்கவசம் அணியாமல் கல்லூரி நேரத்தில் ரெட்டியார்பட்டி நோக்கி எதற்காகச் சென்றார்கள் என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூவர் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.