ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என ரஷியா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

omicron

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’  என்ற புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். புதிய வைரசால் விழிப்புடன் இருக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக மக்களையே கடந்த 2 வருடங்களாக கட்டுக்குள் வைத்து வருகிறது. பாகுபாடுன்றி உலகையே புரட்டி போட்ட இந்த கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் அதிவிரைவில் கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது.

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்  இதுபற்றி தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, பண்டிகைகள், பிற கொண்டாட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சங்களை விட்டு விடக்கூடாது. நமது பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்புட்னிக் வி  மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷிய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமைக்ரான் கொரோனா வகை வைரஸை அழிக்கும் தன்மை கொண்டது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்கவிருப்பதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. கமலேயா இன்ஸ்டிடியூட், கவலைக்குரிய  ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.ஓமிக்ரானுக்கான தடுப்பூசியை  45 நாட்களில் பெருமளவில்  தயார் செய்ய முடியும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் நிர்வாக அதிகாரி கிரில் டெம்ட்ரிவ்  கூறியுள்ளார்.

மேலும் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற பிறழ்வுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதால், ஓமிக்ரானை  தடுக்கும் என  கமலேயா நிறுவனம் நம்புகிறது. பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் ஓமிக்ரான் பூஸ்டர்களை வழங்குவோம் என தெரிவித்தனர்.