தேனி அருகே பெற்ற மகளை தாயாக்கிய சாமியார்.தன் மகளின் கர்ப்பத்திற்கு உறவுக்கார வாலிபர் தான் காரணம் எனக் கூறி அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வைத்த கொடூரம்.சினிமாவை விஞ்சுக் கூடிய இந்த சம்பவம் பற்றிய விரிவான ஒரு செய்தி தொகுப்பு.

sexual abuse

கடந்த 2021 பிப்ரவரி 10-ம் தேதி பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த திருமணமாகாத 16 வயது சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியும் சிறுமியின் தந்தையான சாமியாரும் சேர்ந்து தேவதானப்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த உறவுக்காரப் பையன் ஒருவர் தான் இந்த குழந்தைக்கு தந்தை என்று கூறி அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் அந்த உறவுக்காரப் பையனைக் கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என்று கூறிய அந்த வாலிபர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அந்த வாலிபர் சிறுமி மற்றும் பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் அந்தக் குழந்தை அந்த வாலிபருக்கு பிறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தபோது அவர் தான் குழந்தைக்கு உண்மையான தந்தை என்பதும் தன் மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கியதுடன் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று கருதி உறவுக்காரப் பையன் மீது பழியைப் போட்டு அவரை சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த சாமியாரைக் கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியையும்  சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பதினாறு வயதான தனது சொந்த மகளையே தாயாக்கியதுடன் மற்றொரு வாலிபர் மீது பழியைப் போட்டு அவரை சிறையில் அடைக்க வைத்த சாமியாரின் கொடூரச் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.