ஈரோடு அருகே இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீர் என்று உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே துறையம்பாளையத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி மூர்த்தி அவரது வயது 55. இவர் கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மூர்த்தியின் மகன்கள் விரக்தியில் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 31-ம் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது கொண்ட ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்து உள்ளது. அதைத்தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என்று முடிவு செய்துஉள்ளனர். அதனை கண்ட மகன்கள் உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து  இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் அப்பகுதியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.