வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு நடித்த ஒரு படத்தின் காமெடி காட்யில், “ 'தென்னை மரத்தில் ஒரு குத்து, ஏணியில் ஒரு குத்து' என வருவது போல” தற்போது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பதிவான வாக்குகளும் சில அப்படியே இருப்பது அனைத்து தரப்பு மக்களிடமும் சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவற்றுடன், 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில், நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் ஒருவர் வாக்கு சீட்டில் உள்ள அனைத்து சின்னங்களுக்கும் துளியும் பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் ஒரு குத்து குத்தி வாக்களித்திருக்கிறார்.

அதாவது, வடிவேலு காமெடியில் “தென்னைமரத்துல ஒரு குத்து, ஏணியில ஒரு குத்து” என்பது போல, அந்த நபரும் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா சின்னங்களிலும் தேர்தலில் வாக்கு அளிக்கும் முத்திரையை மாறி மாறி குத்தி தள்ளி உள்ளார். 

இதன் காரணமாக, அது செல்லாத ஓட்டாக மாறிப்போய் உள்ளதால், அது செல்லாத ஓட்டாகவும் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்திருப்பதும், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.