இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சாதராண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை விதவிதமான ஸ்மார்ட்ஃபோன்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

விலையும் மாடலும் தான் வித்தியாசமாக இருக்கின்றதேயொழிய ஸ்மார்ட்ஃபோன் இல்லாத மக்கள் இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக கொரோனா பரவல் வந்தபின்பு பொதுமுடக்கம் காரணமாக ஆன்லைனில் மாணவர்கள் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ashwini vaishnav

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் மட்டுமே வகுப்புகளை கவனிக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகினர். இதன்காரணமாக ஸ்மார்ட்ஃபோன்களின் தேவை அதிகரித்தது.

எனினும் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையேற்றத்தால் ஏழை மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத நிலைமையும் உண்டானது. இதற்கு எல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்  ‘தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை’ சார்பில் “இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டணி உச்சிமாநாடு 2021” தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் திறன்பேசிகளின் விலையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பின்னர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “உலக அளவில் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலம் ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. 

ashwini vaishnav

இது மிக மிக முக்கியமான விலையாக கருதப்படுகிறது. ஏனெனில் இது குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கும் மலிவு விலையில் கிடைப்பதாக உள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடைசி மைல்வரை ஸ்மார்ட்ஃபோன் சென்றடையும் வகையில் வினியோக சங்கிலி செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப்புகள் உற்பத்தியை அதிகரிக்க, இதுபோன்ற மேலும் பல முயற்சிகள் அரசாங்கத்தால் வரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வருவாயை அதிகரிப்பதற்கும் ஏழைகளுக்கு சேவைகளை அதிகரிப்பதற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.