குடும்ப அரசியல் மக்களாட்சிக்கு ஆபத்தானது என்று கூறி, காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

71-வது இந்திய அரசியலமைப்பு நாள் இன்று தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் கொண்டு வந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் வகையிலும், அவரை போற்றும் வகையிலும் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது வழக்கம்.

முன்பு தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்ட இந்த நாள் தற்போது இந்திய அரசியலமைப்பு நாள் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடம் நவம்பர் 26-ம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வாசித்து விழா கொண்டாடுவது வழக்கம். 
அதன்படி நாடாளுமன்றத்தின் மத்திய அறையில் பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

 '' நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துக்கள். இன்றைய நாள் நாடாளுமன்றத்தை  வணங்க வேண்டிய நாள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நமக்கு வழங்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். 

PM Modi

நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. பெரும் பாரம்பரியம் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.

1950-க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும்.

அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபித்துள்ளது. 

அம்பேத்கரின் சேவையை சிலர் வெளிப்படையாக பாராட்டத் தயங்குவது வேதனை அளிக்கிறது. அம்பேத்கரின் சேவையை அங்கீகரிக்க மறுப்பவர்களால் எப்படி இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்? அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள்.

PM Modi

நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஊழலுக்காக தண்டனை பெறுபவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. 

கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல  இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்துவிட்டன'' இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். 

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை புறக்கணித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.