“தமிழக அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்குவதா?” என்று, கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நூலகத்துறை சார்பில் அண்மையில் வாங்கப்பட்ட நூல்கள் உள்ளிட்டவை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அறிவுசார் சமூகத்தின் அடையாளமான பொது நூலகத்துறையை முடக்கும் விதமாக, கடந்த பல ஆண்டுகளாக நூல்கள் வாங்கப்படாமல் இருப்பதாகவும், ஒரே புத்தகம்.. பல பெயர்களில் அச்சிடப்பட்டு நூலகத்துறைக்கு வாங்கப்படுவதாகவும் தொடர்ச்சியாகப் புகார்கள் கிளம்பிக்கொண்டே இருந்தன.

அத்துடன், குறிப்பிட்ட ஒரே சில பதிப்பகத்திடம் மட்டுமே புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும், அதில் ஒரு சில பதிக்கபங்கள் பெயர் அளவிலான பதிப்பகங்கள் என்றும், அண்மைக் காலமாக, சக பதிப்பாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகளாக கூறப்பட்டு வந்தது.

இது தொடர்பான புகார்கள் வரும் போதெல்லாம், அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மாற்றப்பட்டு, சுமார் 6 மாத காலத்திற்குப் பிறகு மீண்டும் அதே அதிகாரிகள் அதே பதிவிக்கு வந்துவிடுவார்கள் என்றும், இது வாடிக்கையாக நடைபெற்று வரும் விசயம் என்றும், தமிழக பதிப்பாளர்கள் தொடர்ச்சியாக முன் வைக்கும் குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தான், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பொது நூலகத்துறையை முடக்கும் விதமாக, நூல்கள் பல ஆண்டுகளாக வாங்கப்படாமலே இருப்பது குறித்த பிரச்சனையை திமுக தன் கையில் எடுத்து உள்ளது. 

இது தொடர்பாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் முக்கிய பிரிவுகளில் பொது நூலகத் துறை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். பொது நூலகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், கலைஞர் முதலமைச்சராக இருந்த போது கடந்த 1972 ஆம் ஆண்டில் பொது நூலகத்துறை இயக்குநரகம் உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கன்னிமாரா நூலகம் இன்று 125 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “தலைவர் கலைஞர் அவர்களின் மகத்தான சாதனைத் திட்டமாகவும், ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகவும் உலகப்புகழ் பெற்று மிளிரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 4,500 க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்த நூலகங்களில், பொது மக்களின் பயன்பாட்டிற்கென ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் பல கோடி ரூபாய் செலவில் தமிழ் நாடு அரசால் வாங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவ்வாறு வாங்கப்படும் புத்தகங்கள், அவற்றின் எண்ணிக்கை, அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், செலவிடப்பட்ட தொகை குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் தற்போது கடைப்பிடிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தினர் மத்தியில் பலமாக எழுந்துள்ளது” என்றும், அவர் மேற்கொள் காட்டி உள்ளார்.

“தமிழில் அண்மைக்காலமாக வெளிவந்துள்ள குறிப்பிடத்தகுந்த முக்கிய படைப்புகள் கூட பொது நூலகத்துறையால் வாங்கப்படவில்லை என்ற குரல் இன்று எல்லாப் பக்களிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக இன்று ‘இந்து தமிழ் திசை நாளேட்டின் நடுப்பக்கத்தில் “கன்னிமாரா நூலகம்: சென்னையின் அறிவுச் சின்னம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள புவி அவர்களின் கட்டுரையில் “தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சமீப ஆண்டுகளில் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த முக்கிய புத்தகங்கள் கூட வாங்கப்பட்டதாகக் காட்சிக்குப்படவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது” என்பதையும், அவர் மேற்கொள் காட்டி உள்ளார்.

“இந்தியத் திருநாட்டில் வெளியிடப்படும் எந்தப் புத்தகமாயினும் அதன் ஒரு பிரதி அளிக்கப்பட வேண்டும் என்ற தகுதி பெற்ற நான்கு முக்கிய தேசிய வைப்பு நூலகங்களுள் (National Depository Centre) ஒன்றாக விளங்கும் கன்னிமாரா நூலகத்தின் இன்றைய நிலையே இதுதான் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றென்பதைத் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல; பொது நூலகத்துறையின் மூலம் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட நூல்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள் கூட இடம் பெறவில்லை என்பதும், குறிப்பிட்ட சில இடைத்தரகர்களுடன் மட்டுமே கை கோர்த்து புத்தகங்கள் வாங்கப்படுவதாகவும், ஒரே புத்தகம் பல பெயர்களில் அச்சிடப்பட்டு வாங்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்திருக்கின்றன” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார். 

“இது குறித்து நூலக நடவடிக்கைகளின் மீது அக்கறை கொண்ட சில சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், குறிப்பிட்ட ஓர் ஆண்டில் வாங்கப்பட்ட புத்தங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய வினாக்களுக்குப் பொது நூலகத்துறை உரிய தகவல் அளிக்க முன்வராமல் இத்தகு தகவல் கோர வாய்ப்பில்லை என்ற ரீதியில் பூசி மெழுகிப் பதிலளித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அறிவுசார் சமூகத்தில் நூலகங்களின் செயல்பாடு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்தும், தமிழ்ப்பதிப்புச் சூழல் சந்தித்துவரும் சவால்களை எண்ணிப் பார்த்தும், அவற்றின் மேம்பாட்டிற்காகவும், அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற பதிப்பாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்கவும் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம்’ கடந்த பத்தாண்டுக் காலமாக எந்த செயல்பாடுகளும் இன்றி முடங்கிப் போயிருக்கின்றது” என்பதையும் அவர் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இதனால், “நூலகத்துறை தன் மீது படர்ந்திருக்கும் களங்கத்தைக் கழுவிக்கொள்ளும் பொருட்டாவது, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, நூலகத்துறை சார்பில் அண்மைக்காலமாக வாங்கப்பட்ட அனைத்து நூல்கள், அவற்றின் எண்ணிக்கை, பதிப்பாளர்கள், தொகை குறித்த முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, தரமான படைப்புகளை பொது நூலகங்களுக்கான பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.