“வேலைகள், தொழில், வணிகம் என்று 4 வட மாநிலங்களுக்கும் உள்ள அதே உள் அனுமதி அதிகாரம் தமிழ்நாட்டுக்கும் வேண்டும்” என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் மீண்டும் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. 

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்று, பேரறிஞர் அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதோ?” என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

காரணம், இந்தியாவில் இந்தி மொழி பேசும் வட மாநிலங்களில் ஒரு விதிமுறைகளும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு மாநிலங்களில் வேறுமாதிரியான விதிமுறைகளும் நடைமுறையில் இருப்பது பலரையும் கேள்வி கேட்க வைக்கிறது.

இது தொடர்பாக, வேதனையோடு கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம், “கனவுகள் பல சுமந்து கல்விச் சாலைகளில் கற்று வெளிவரும் நம் இளையோர் வேலை இல்லை என்ற பாலையில் வீழ்கிறார்கள். இளமையை வறுமை தின்கிறது” என்று, கவலையோடு குறிப்பிட்டு உள்ளனர்.

”ஆனால், இந்திக்காரர்களும் இன்ன பிற அயல் மாநிலத்தாரும் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக, அலுவலர்களாக, தொழிலாளர்களாக, தொழில் முதலாளிகளாக, காவல் துறையினராக, வணிகர்களாக, திரைத் துறையினராக, ஊடகத்துறையினராக, மாணவர்களாக, மருத்துவர்களாக, செவிலியர்களாக, இன்னபிற துறையினராக பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கிறார்கள்! வாழ்ந்து பார்க்கிறார்கள்” என்றும், கூறியுள்ளது.

“கர்நாடகம், குஜராத், மராட்டியம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்றவை மாநில அரசு, இந்திய அரசு மற்றும் தனியார் துறை வேலைகள் தங்கள் தங்கள் மாநில மக்களுக்கே என்று அரசு ஆணைகள், சட்டங்கள் இயற்றியுள்ளன. அங்கெல்லாம் சட்டப் பாதுகாப்பு செய்த ஆட்சிகள், அவற்றின் கட்சிகள் இந்தியத் தேசியத்தில் இயங்குபவை” என்றும், பதிவு செய்துள்ளது.

“அண்மையில் பாஜக வின் அரியானா அரசும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் ஆந்திர அரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஜார்க்கண்ட் அரசும் தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை, மண்ணின் சொந்த மக்களுக்கே என்று சட்டம் இயற்றின என்றும், அம்மாநிலங்களின் ஆளுநர்கள் அச்சட்டங்களுக்குக் கையொப்பமிட்டார்கள்” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

“ஆனால், மாநிலக் கட்சிகள் ஆண்டுவரும் தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலைக்கான சட்ட ஏற்பாடு எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சி 2016 ல் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வை (TNPSC) இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எழுதி இங்கு வேலை பெறலாம்; தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேலையில் சேர்ந்த பின் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று சட்டத்திருத்தம் செய்தது. இச்சட்டத்திருத்தத்தை அப்போது திமுக எதிர்க்கவில்லை. அதற்கு முன் இருந்த திமுக ஆட்சியும் மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டம் இயற்றவில்லை” என்றும், குற்றம்சாட்டி உள்ளது.

“இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள திமுகவும் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கான சட்ட ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், தமிழ்நாடு அரசுப் பணி, தமிழ்நாடு அரசு நிறுவனப் பணி ஆகியவற்றுக்கான தேர்வில் தமிழ்மொழி ஒரு தேர்வுத் தாளாக இருக்கும் என்பதை மட்டுமே அண்மையில் சட்டப்பேரவையில் திமுக ஆட்சி அறிவித்தது” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

“தமிழ்நாட்டில் குவிந்துள்ள பிற மாநிலத்தவரும், தமிழில் தேர்வெழுதுவர். பிற மாநிலங்களில் வாழ்வோரும் தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கான தேர்வெழுதலாம் என்று அதிமுக ஆட்சி செய்த திருத்தத்தை இன்றையத் திமுக ஆட்சி ரத்துச் செய்யவில்லை” என்றும், கூறியுள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு அஞ்சல் துறைப் பணிகளுக்கான தேர்வில் தமிழில் ஒரு தாள் இருந்தது. அத்தமிழ்த் தேர்வில் அரியானாக்காரர்கள் மொத்த மதிப்பெண் 25 க்கு 23 வாங்கியது அம்பலமானது. ஊழல் வழியாக தமிழர்கள் விடைத்தாளை எழுதிக் கொடுக்க அதை இணைத்துக் கொடுத்து, இந்திக்காரர்கள் தமிழில் 90 விழுக்காடு மதிப்பெண் பெற்ற சதி அம்பலமானது. அத்தேர்வு முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டன” என்பதையும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

“திமுக தனது சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கை 2021 பத்தி 196 ல் பின்வருமாறு உறுதி கொடுத்தது” என்றும் குறிப்பிட்டு

“196 தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும். இந்தத் தேர்தல் உறுதி மொழியைச் செயல்படுத்த திமுக ஆட்சி, நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள் என்று திமுக கூறுவதில் இந்திய அரசுத் தொழில் நிறுவனங்கள் வருமா? தமிழ்நாடு அரசுத் தொழில் நிறுவனங்கள் வருமா? தெரியவில்லை” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளது.

“தொழில், வணிகத் துறைகளில் மார்வாடி, குஜராத்தி சேட்டுகளும் இதர வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கோலோச்சுகிறார்கள். அதற்கு மேல் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டை விழுங்கிக் கொண்டுள்ளன. தமிழ் முதலாளிகள், தமிழ்த் தொழில் முனைவோர் ஓரங்கட்டப்படுகிறார்கள்” என்றும், வேதனை தெரிவித்து உள்ளது.

“வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதிகளில் மார்வாடி – குஜராத்தி உள்ளிட்ட வடநாட்டவர்களுக்கே வாய்ப்புகளை வாரி வழங்குகிறது இந்திய ஆட்சி; சலுகைகள் தருகிறது. அதிலும் தமிழர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும், கல்வியில் இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணிக்கவும், இந்திக்காரர்களைத் திணிக்கவும் மோடி அரசு ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துகிறது என்றும்” சுட்டிக்காட்டி உள்ளது.

“வருங்காலத்தில் நீட் தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் திணிக்கப்படுவர் என்றும், தமிழ்நாட்டுக் கல்வி தமிழர்களுக்கே ஆக வேண்டும்! நீட் தேர்வை நீக்க வேண்டும்” என்றும், அதில் வலியுறுத்தி உள்ளது. 

“தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி நிலையங்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு மிகப்பெரும் விகிதம் கிடைக்க கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசிடம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கிறது” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தெரிவித்து உள்ளது.