வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருந்தது. அது இன்று (நவம்பர் 23) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) அது புயலாக மாறி வலுப்பெற இருக்கிறது.

இந்த புயலுக்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 25-ந் தேதி (நாளை மறுதினம்) பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

24-ந் தேதி (நாளை) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

25-ந் தேதி (நாளை மறுதினம்) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதியில் 23-ந் தேதி (இன்று) மணிக்கு 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலான வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதேபோல் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் 24, 25-ந் தேதிகளில் (நாளையும், நாளை மறுதினமும்) சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசும். இதன் காரணமாக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் முன்னெச்சரிக்கையாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நாகை, சீர்காழி, புதுச்சேரி மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சூறாவளிக் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் 25ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,

`` நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது. தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன. நவ.25ல் புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது"

என்று கூறியுள்ளார்.