“தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போதும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது.

“பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுப்படுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்றும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடந்த 30 ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், கொரோனா பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது” என்றும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அததுடன், “தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன்கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” என்றும், தமிழக அரசு கூறியுள்ளது.

அதன்படி, “சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதியில்லை” என்றும், தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

அதே போல், “ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” என்றும், கூறியுள்ளது.

மேலும், “அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், அப்படி அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.