“புதிதாக உருமாற்றம் அடைந்து உள்ள ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஓமைக்ரான் தொற்று வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தார்.

அதே நேரத்தில், “ஒமிக்ரான், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்து உள்ளதாக” உலக சுகாதார அமைப்பும் நேற்றைய தினம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தான், ஒமைக்ரான் பரவல் தமிழகத்திலும் தற்போது வேகம் எடுத்து உள்ளதால், அது இன்னும் தீவிரமாக பரவக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழலில் தான், “கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது மக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களுக்கு வீடியோவாக வாயிலாக கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வீடியோவில், “இந்த 2022 ஆம் ஆண்டு ரொம்ப நல்லா இருக்கும் அப்படிங்கறது தான் நம்ம எல்லோருடைய எதிர்பார்ப்பு, நம்பிக்கை” என்று, கூறியுள்ளார்.

“அப்படி, இந்த ஆண்டு நமக்கு நல்லா இருக்கணும்னா, கடந்த ஆண்டு நடந்த பாடங்களை நாம் மறக்கவே கூடாது.  முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில்  இருந்து நாம் மீண்டு வந்து இருக்கிறோம். 

இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, உங்களுடைய முதலமைச்சராக நான் வந்தேன். இந்த அரசி முதல் வேலை தொற்றை கட்டுப்படுத்துவதாக தான் இருந்தது.

கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்போது, ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவிகிட்டு இருக்கு. அதனுடைய வேகம் அதிகமாக இருக்கு.  அதனால், நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

“ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த என் தலைமையில் இருக்கக்கூடிய உங்கள் அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வரும் பயணிகளுக்கான பரிசோதனை, நம்ம மாநிலத்திற்கான அறிகுறி தெரிந்தால் அதற்கான பரிசோதனை,  சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து உபகரணங்கள், எல்லாமே போதுமான அளவு இருக்கிறது என்றும், இன்னும் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல முழுமையான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம் என்றுமு், அதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“உங்களுடைய ஒத்துழைப்பு தான் இந்த அரசுக்கு தேவை என்றும், ஒமிக்ரான் பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது என்றும், அது உங்கள் பாதுகாப்புக்காக தான்” என்றும், முதலமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். 

அத்துடன், “கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை தயவு செய்து அனைவரும் தவிருங்கள் என்றும், அவசர தேவைகள் அன்றாட பணிகளுக்காக, வெளியில் செல்லும் போது, மக்கள் போதுமான இடைவெளி கடைபிடியுங்கள் என்றும், சனிடைசர் பயன்படுத்துங்கள் என்றும், இல்லை என்றால் சோப்பு போட்டு கைகளை கழுவுங்கள்,  பொதுவெளியில் முககவசம் அணியுங்கள்” என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், “பாதுகாப்புக்காக மட்டுமல்ல உங்கள் சார்ந்து இருக்கக்கூடிய அத்தனை பேரின் பாதுகாப்புக்காகவும் தான் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

“தடுப்பூசி முழுமையாக செலுத்தி ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு வீரியம் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் என்றும், அதனால் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்றும், தமிழக மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.