“மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று பேசி  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதி கூறி இது வரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று, தனது பேச்சை தொடங்கி உள்ளார்.

அதன்படி, “நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன் என்றும், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும், 12.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது” என்றும், கூறினார். 

அத்துடன், “இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து உள்ளனர் என்றும், அரசு ஊழியர்களின் அகவிலைப்ப்படி உயர்த்தப்பட்டு உள்ளது” என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது என்றும், மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம்” என்றும், அவர் தனது உரையாடலில் குறிப்பிட்டு உள்ளார். 

குறிப்பாக, “வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி, சொல்லாத திட்டங்களையும் நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்றும், இவற்றுடன் வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது” என்றும், கூறியுள்ளார். 

முக்கியமாக, “நான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் தற்போது வரை 2,619 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன் என்றும், லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

அதே போல், “கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும், தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றும், எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொது வெளியில் இருக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உரையில் பேசி உள்ளார்.