பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப் பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என்று அச்சிடப்பட்ட ஃபோட்டோ வெளியாகி உள்ளது.

வரும் 2022 ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை துவங்க இன்று ஒன்றரை மாதங்களே உள்ளது. இதையடுத்து, தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

tamil new year

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப் பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என்று அச்சிடப்பட்ட ஃபோட்டோ வெளியாகி உள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை 1 தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 -ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2011-ல் சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், தை 1 தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

tamil new year TN

பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணி பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்ட துணிப்பை குறித்த போட்டோ வெளியாகி உள்ளது. என்றாலும்கூட, 2022-ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பும், சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். ஒரு இனத்துக்கான அடையாள சிக்கல் என்பதால், நூற்றாண்டுகளாகத் இப்பிரச்சினை தொடர்வது குறிப்பிடத்தக்கது.