“7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி, விளக்க வேண்டும்” என்று, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது, இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.

“தமிழக மாணவர்கள் இன்னொரு மொழியைக் கற்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதையும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான அறிவுறுத்தலை வழங்கி இருப்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று, நேற்றைய தினம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிக கடுமையாக எதிர்த்திருந்தார்.

அதாவது, கடந்த நில நாட்களுக்கு முன்பு நீட் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் மொழிக் கொள்கை பற்றிய கருத்துக்கள் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது கருத்துக்களை அறிக்கையாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மிக கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டு உள்ளது.

“கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் இன்றைய முரசொலியில் ஒரு கட்டுரை ஒன்று விரிவாக எழுதப்பட்டு உள்ளது. 

அதில், “தமிழக ஆளுநர் ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லையை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து அரசியல் தட்ப வெட்பங்களை உணர்ந்து அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை. 

காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்கு பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு தேவை, பல நேரங்களில் அந்த பாணி கைக்கொடுக்கும்; ஆனால், அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்” என்று, குறிப்பிட்டு உள்ளது.

“குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி, அவர் தமது பொறுப்புணராது தமிழக மக்கள் தன்மானத்தை உரசிப் பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது” என்றும், முரசொலி மிக கடுமையாகவே விமர்சித்து உள்ளது.

“மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும் போது, அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது, சுமார் 7 கோடி தமிழக மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும். பல பிரச்னைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும். அதிலே ஒன்று இருமொழிக் கொள்கை, மற்றொன்று நீட் வேண்டாமென்பது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது. 

“ஆளுநர் ரவி, இதனை உணர்ந்து உரிய தகவல்களை மேலிடத்திற்கு தந்து, ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும்” என்றும், முரசொலி கூறியுள்ளது.

குறிப்பாக, “இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்றும், இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், ’ கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா’ எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புவகிறோம்” என்றும், முரசொலி சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான முரசொலியில், முதன் முதலாக தற்போதைய தமிழக ஆளுநர் ரவி பற்றிய எதிர்ப்பு மற்றும் விமர்சன கட்டுரை வெளி வந்துள்ளதால், இது இந்திய அளவில் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த செய்தி தமிழக அரசியலை சூட்டிக் கிளப்பியிருக்கும் நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகவும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.