“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு வாரம் தொடர் முற்றுகை போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் இந்தியைத் திணிக்க முற்பட்டபோது, தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இந்தி மொழி பின் வாங்கிக்கொண்டது. இதனால், தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்கக் கோரிய போராட்டங்கள் அமைதியாகிப் போனது.

ஆனால், தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் மெல்ல திணிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள அரச பணிகளுக்கு வேற மொழி பேசுபவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதில், அதிகம் வட மாநிலத்தவர்களே தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணிகளில் பணி அமர்த்தப்பட்டதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்தன.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அந்த அமைப்பினர் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்த நிலையில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

குறிப்பா, “தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான ரயில்வேத்துறை, அஞ்சல் துறை, பி.எச்.இ.எல். நெய்வேலி அனல் மின் நிலையம்; திருச்சி, ஆவடி, அரவங்காடு போன்ற இடங்களிலுள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற மத்திய அரசின் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் முதலியவற்றிலும், இந்திய அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவர்களை வேலையில் சேர்த்து வருகிறது. 

சொந்தத் தாய் மண்ணிலேயே வேலைக்குத் தகுதியான தமிழர்கள் ஏதிலிகள் (Refugees) போல் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நிறுவனங்களில் வேலைக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதுதல், வினாவிடைத் தாள்களை முன்பே வெளியில் பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு மோசடிகள் வட நாட்டுத் தேர்வு மையங்களில் நடக்கின்றன. 

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி தொழிற் சாலை, தமிழ்நாடு அஞ்சல் துறை முதலிய வற்றில் அவ்வாறான ஊழல் வழிகளில் தேர்வெழுதி தமிழ்நாட்டில் வேலையில் சேர்ந்த வட நாட்டினர் அவ்வப்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; வழக்குகள் நடக்கின்றன. 

தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக 2017 இல் நடத்திய தேர்வில், வட நாட்டினர் கலந்து கொண்டு தேர்வெழுதி மோசடியாக அதிகம் பேர் வெற்றி பெற்றனர். அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கைது செய்யப் பட்டனர். அந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இவ்வாறான மோசடி வழிகளில் வட மாநில இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வேலையில் சேர்வதை இந்திய ஆட்சியாளர்கள் ஊக்கப்படுத்தி, தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்குக் கிடைக்காமல் செய்து வருகிறார்கள். 

இந்த ஊழல் பின்னணியில் கடந்த 2019 இல் தமிழ்நாடு ரயில்வேதுறையில் பழகுநர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100 க்கு 95 விழுக்காட்டினர் வட மாநிலத்தவர்களாக இருந்தார்கள். அதை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2019 மே 3 ஆம் நாள் பொன்மலை ரயில்வே தொழிற்சாலை வாயிலில் மறியல் போராட்டம் நடத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்த அநீதியை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பின.

இதனையடுத்து, பழகுநர் பயிற்சிக்கான பணி சேர்ப்புக்கு தென்னக ரயில்வே துறையின் எல்லைக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்றும், அதற்கு வெளியே உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாதென்றும் தென்னக ரயில்வே துறை முடிவெடுத்து அறிவித்தது. ஆனால், பணித்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மற்றும் ரயில்வே பணித்தேர்வு அலகு (ஆர்.ஆர்.சி.) ஆகியவற்றின் மூலம் பணியமர்த்தம் பெறும் வேலைகளுக்கு அனைத்திந்திய அளவில் விண்ணப்பிக்கலாம், தேர்வெழுதலாம் என்ற அநீதி இப்பொழுதும் தொடர்ந்து கொண்டுள்ளது. இதனால், அண்மையில் தென்னக ரயில்வே துறை பணிக்குச் சேர்க்கப்பட்ட 3,218 பேரில் மிகப்பெரும்பாலோர் இந்திக்காரர்களும், மற்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆவர். இதில் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட 541 பேரில் 400க்கும் மேற்பட்டோர் இந்திக்காரர்களே. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

ரயில்வே துறையில் திட்டமிட்டு மண்ணின் மக்களாகிய தமிழர்கள் வேலை மறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறார்கள். இதே போன்ற தமிழினப் புறக்கணிப்பு மத்திய அரசின் மற்ற துறைகளிலும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் வட மாநிலத்தவரையும் பிற மாநிலத்தவரையும் வேலையில் சேர்க்கிறார்கள். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை உரிமைப் பறிப்பு, வாழ்வுரிமைப் பறிப்பு மட்டுமல்லாமல், தொலைநோக்கில் தமிழர் தாயக உரிமையைப் பறிக்கும் இன ஒதுக்கல் கொள்கையாகும்” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இதனால், 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென்று கோரிக்கை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை வாயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஓர் அணி என்ற நிலையில், தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்துள்ளது.

“தமிழ்நாட்டு வேலை தமிழ் நாட்டு மக்களுக்கே” என்ற பழைய நிலை மாறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..