தமிழ்நாடு தொழில் முதலீடுகளுக்கு மிகச்சிறந்த மாநிலமாக உருவெடுத்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

tamilnadu

கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாக பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும். 304 திட்டங்களின் மூலம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடியை தமிழகம் மூலதனமாக பெற்றுள்ளது. 2022 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்றுள்ள மிகச்சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ரூ.36 ஆயிரத்து 292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாக பெற்றிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 610 கோடியாகும். ரூ.77 ஆயிரத்து 892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் 2-வது இடத்திலும், ரூ.65 ஆயிரத்து 288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலுங்கானா மாநிலம் 3-வது இடத்திலும் இருக்கின்றன என ‘புராஜெக்ட் டுடே' நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சில நிறுவனங்களில் ‘டாடா' குழுமம், ‘ஜே.எஸ்.டபிள்யூ. ரீனியூ', ‘ஹிந்துஸ்தான் யுனிலீவர்', ‘டி.வி.எஸ்.' மோட்டார், ‘அதானி' குழுமம், 'லார்சன் அண்ட் டூப்ரோ' ஆகியவை அடங்கும். தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதற்கு அதன் சிறப்பான கொள்கைகளும், பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கும் அணுகுமுறையுமே காரணங்களாகும்.

"புதிய தொழில்கள், உயிரித் தொழில்நுட்பம், மருத்துவ உபகரண உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உருவாகி வரும் தொழில்களில் மாநில அரசாங்கம் எளிதாகத் தொழில் செய்வதற்கான தனது முன் முயற்சிகளைத் தொடர வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டில் காணப்படும் உயர்வு, உலக முதலீட்டாளர்களும், தொழில்களில் முன்னணியில் இருப்போரும் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் தலைமையும், அதிகாரத் துறையினரும் வலிமையாகவும், தொழில் முதலீடுகளை எப்போது ஈர்க்கும் விருப்புறுதியுடனும் இருக்கின்றனர்" என்று கெவின் கேர் நிறுவனத்தின் தலைவரும். நிர்வாக இயக்குநருமான சி.கே.ரெங்கநாதன் தெரிவிக்கிறார். இந்தியா முழுவதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 7,764 தொழில் திட்டங்கள் வந்துள்ளன. இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.12,76.679 கோடியாகும்.

அதனைத்தொடர்ந்து இது குறித்து தொழில்துறையின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ‘‘எங்களது பிரச்சினைகளை பற்றி கேட்பதற்கும், அவற்றை தீர்த்து வைப்பதற்குமான விருப்பம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதே நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் கருத்தாகும். முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன. மேலும் ஊக்கத்தொகுப்புகள் உடனடியாக கிடைக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவை முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு விரைந்து முடிவெடுப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது’’ என தெரிவித்தார். மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.