கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன? என்று தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா மரணங்களைத் தவிர்க்கும் நோக்கில், கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை இணைந்து வகுத்து, தற்போது அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இருக்கக்கூடிய கூடுதலான சிறப்பு அம்சங்கள் என்ன? என்பதனை தற்போது பார்க்கலாம்..

அதாவது, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 298 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் 300 யை நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை 2 நாட்களுக்கும் மேலாக 250 யை நெருங்கி வருகிறது. 

இப்படியான நிலையில் தான், தமிழகத்தின் தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தமிழக அரசின் கோவிட் சிறப்பு நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டு முறைகளை தற்போது புதிதாக வகுத்து உள்ளனர். இது குறித்து, தற்போது அரசாணையாகவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி,

- “96 க்கு மேல் ஆக்சிஜன் அளவுள்ள நோயாளிகள் யாரும் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படக் கூடாது” என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

- அத்துடன், “இந்த அரசாணைப்படி, கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் மொத்தம் 4 வகையாகப் பிரிக்கப்பட்டு” உள்ளனர்.

வீட்டுத்தனிமையில் இருப்பவர்: 

- “இந்த வகையில் இருப்போருக்கு கொரோனா நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும்; உடல் வலி, தொண்டைவலி, மூச்சுவிடுதலில் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், நாக்கில் சுவை இல்லாமல் இருத்தல், மூக்கில் மணமும் தெரியாமல் இருந்தால் ஆகிய அறிகுறிகள் இருந்தால், அவர்கள் கொரோனா நோயாளியாகவே” கருதப்படுவார். 

- “இவர்களைப் பரிசோதித்து விட்டு, ஆர்டிபிசிஆர் முடிவுக்காகக் காத்திராமல், மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள  வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஷ

வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போர் 2 ஆம் வகை: 

- “இந்த வகையில் இருப்போருக்கு கொரோனாவின் அனைத்து அறிகுறிகள் இருக்கும் எனில், ஆக்சிஜன் அளவு 96 க்கு கீழ் குறைந்து, 95 ஆக மாறுபவர்கள் என்றும், இவர்களும் உடனடியாக சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்று கருத வேண்டும்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர்:

- “ஆக்சிஜன் அளவு 90 - 94 க்குள் இருப்போர், ஒரு நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை மூச்சு வாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும். இந்த பிரிவில் அனுமதிக்கப்படுவோருக்கு, ரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90 க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ, அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவோர்:

- “90 சதவீதத்திற்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்கள், ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர் இங்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

- “இவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர சிகிச்சை அளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும் என்றும், இந்த ஆணை 14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

- “இந்த வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதால், இறப்புகளை எந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இதைத் தொடர்வதா இல்லையா என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாக உள்ளன. 

- இந்த நெறிமுறைகளை வகுத்த குழுவில் ஒருவரான அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளது குறிப்பிடத்தக்கது.