திரைப்படங்களில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் எனவும், முற்போக்குவிதமான படங்களை இயக்க வேண்டும் எனவும் திரைத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 

சென்னை  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தென்மண்டல இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் நடத்தபடும் தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் உள்ள திரைப்பிரபலங்கள் பங்கேற்று, இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு , திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூக வலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், குறைந்த பட்ஜெடில் பெருமளவில் வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஒடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி ஈர்ப்பது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

மேலும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: அப்பா கலைஞர் முதல், மகன் உதயநிதி காலம் வரை திரையுலகில் பங்காற்றியுள்ளது பெருமையாக உள்ளது. தான் எழுதிய உங்களின் ஒருவன் என்ற புத்தகத்திலும், திமுகவும், திரைத்துறையும் பிரிக்க முடியாது.கொரோனாவினால் பல துறையினரும் பாதிக்கப்பட்டனர், அதில் திரைத்துறையும் பாதிக்கப்பட்டது, தற்பொழுது, கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து திரைத்துறை முன்னேறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். பொழுதுபோக்காக மட்டும் இத்துறை இல்லை, திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழகம் திகழ்கிறது. திரைத்துறை போன்று, தமிழ் செய்தி நிறுவனங்களும் மிக நீண்ட வரலாற்றை பெற்றுள்ளது. மனிதனுக்கு கல்வி, நிதி வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல், மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி வழங்கும் துறையாகவும் திரைத்துறையும், செய்தி நிறுவனங்களும் உள்ளது என்று தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் திரைத்துறைக்கு பல்வேறு வாசல்கள் உள்ளது, அதனை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். சிறந்த திரைப்படங்களும், திறமையானவர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருப்பதோடு, தேவையான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தரும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை திரைப்படங்களில் வெளியிட வேண்டும் எனவும், முற்போக்கு சம்பந்தமான திரைபடங்களையும் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்தார்.