“திமுக தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் விரைவில் வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுப்பிடித்துக்கொண்டிருக்கிறது. 

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும்அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களும் தான் வெற்றி பெற்றாக வேண்டும்” என்று, சூளுரைத்தார். 

“அப்படி வெற்றி பெற்றால் தான், அது முழுமையான வெற்றியாக அமையும் என்றும், திமுகவிற்கு அது மகத்தான வெற்றியாக இருக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும்” என்று, சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் திமுகவினர் வெற்றி பெற்று விடுவார்கள் என்றும், அவ்வாறு வெற்றி பெற்று வந்தால், அதிமுகவினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள்” என்றும், அஞ்சி நடுங்கி, உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான் கடந்த அதிமுக ஆட்சி” என்றும், காட்டமாகவே பேசினார்.

அத்துடன், “ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என்றும், அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“தேர்தல் வாக்குறுதி, நிதிநிலை அறிக்கை, 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும், அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதத்துக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “விரைவில் மகளிர் உரிமைத் தொகையான மாதம் 1,000 ரூபாய் வழங்க இருப்பதாகவும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுதிப்படத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யாரையும் நாங்கள் ஏமாற்றப்போவதில்லை என்றும், இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாக தெரியும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுட்டிக்காட்டி பேசினார்.