“வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து உள்ளார்.

தேனி மாவட்டத்தில் தமிழ அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அதாவது, தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு பகுதியில் இன்று நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் 114.21 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், 74.21 கோடி ரூபாய் மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது, இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்று வரும் மே 7 ஆம் தேதி உடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது” என்று, குறிப்பிட்டார்.

“தேனிக்கு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்து உள்ளேன் என்றும், தேனி மாவட்டத்தை கருணாநிதி உருவாக்கினார் என்றும், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கருணாநிதி தான் திறந்து வைத்தார்” என்றும், பேசினார். 

“18 ஆம் கால்வாய் திட்டத்தை கருணாநிதி தான் தொடங்கி வைத்தார் என்றும், தேனி உழவர் சந்தையை கருணாநிதி தொடங்கி வைத்தார் என்றும், தேனி புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்த நான் தான் அடிக்கல் நாட்டினேன் என்பதை இங்கே பெருமிதத்தோடு நினைவு கூறுகிறேன்” என்றும், குறிப்பிட்டார்.

மேலும், “இந்த விழாவில் 50 க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ் 10 ஆயிரத்து 427 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது என்றும், இது தான் ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம்” என்றும், அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக, “இது மக்களுக்கான அரசு என்றும், இதை தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம்” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார். 

முக்கியமாக, “வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல்” என்றும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது தான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்” என்று, பொது மக்கள் மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரையாற்றினார்.