தமிழ் திரையுலக இயக்குநர்கள், ஜெய்பீம் திரைப்படத்தின் நிஜ நாயகரான ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளனர்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய் பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இந்த திரைப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன் ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

கடந்த 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் ஜெய்பீம் திரைப்படம் குவித்து வருகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 

c1

1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது. இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே, வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் ஜெய் பீம் திரைப்படமாக உருவாகி பாராட்டுக்களை குவித்துக்கொண்டிருக்கிறது.

பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து, அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின்கொலைக்கு நீதி பெற்று கொடுத்த வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.

30 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய சந்துரு பல பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடியுள்ளார் அந்த வழக்குகளுக்கு கட்டணம் எதுவும் பெறாமல் சேவை மனப்பான்மையுடன் நீதியரசர் கே.சந்துரு வழக்காடியுள்ளார். பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001, 2004-ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும் தீவிரவாதிகளின் வழக்கறிஞர் என அன்றைய அரசால் சந்துரு புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

c3

பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம்’ என கூறி உச்சநீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக சந்துருவை நியமித்தது. பதவியேற்ற உடன் இவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது சொத்து விவரங்களை உச்சநீதிமன்ற நீதிபதியிடம் சந்துரு சமர்ப்பித்தது தான் அந்த ஆச்சர்யத்திற்கு காரணம். 

இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள் என தான் மொத்தம் 95 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை  உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

c5

அதோடு மட்டுமல்லாமல் தனது ஓய்வின் போது தான் புதிதாக வாங்கிய சொத்து விவரங்களை சமர்ப்பித்த நீதியரசர் சந்துரு, வழக்கமாக  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் பிரிவு உபச்சார விழா தேவையில்லை என மறுத்துள்ளார். ஓய்வு நாளன்று  தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றுள்ளார். இவரின் செயல்பாடுகள் மற்ற நீதியரசருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்துள்ளது.  ராஜாகண்ணு வழக்கு குறித்த இவரது தகவல்களே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவை நேரில் சந்தித்து கெளரவித்துள்ளனர். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பிரபுதேவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, நீதியரசர் கே.சந்துருவின் ஓவியத்தை பரிசளித்து கெளரவித்துள்ளனர்.  அவருடன் இயக்குநர் தா.செ ஞானவேலும் உடனிருந்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்தப் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நீதியரசர் கே.சந்துரு.