இந்தியா முழுவதும் 74-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக மு.க.ஸ்டாலின் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர்.எம்.பாபு முருகவேல் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் இந்த புகாரை அளித்திருந்தார். அவர் அளித்த புகார் மனுவில், ‘தேசிய கொடியைஏற்றும்போது, இறக்கும்போது அதற்கு உரிய மரியாதை செலுத்தவேண்டும். ஆனால், மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றும்போது மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. கையுறை அணிந்திருந்தார். அதேபோல தேசிய கொடியை ஏற்றிய பிறகு அதற்கு மரியாதை செலுத்தாமலும், வணக்கம் செலுத்தாமலும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும், தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் திரு.வி.கல்யாணசுந்தனராரின் 137ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை தண்டலம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், பென்ஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தேசியக் கொடிக்கு மிகப்பெரிய அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை திமுக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்து ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி நான் பார்த்ததே இல்லை. அவர் பள்ளிக்கூடம் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது என்பதால் தேசியக் கொடி பற்றிய புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அதனை காவல் துறை மேற்கொள்ளும். நமது தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தில் எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்தது போன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் சட்டம் தன் கடமையை செய்யும்” என அமைச்சர் பாண்டியராஜன் என்று குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் விநாயகர் சிலையை ட்விட்டரில் பதிவிட்டது பற்றிய கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் போலித்தனத்தின் உச்சம். இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு திமுகவில் யாரும் வாழ்த்து சொல்லவில்லை. இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக் கூடாது, தேசிய கொடியை ஏற்றக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகத்தான் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்” என்றும் கூறினார்.