மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கொரோனா இரண்டாம் அலை மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வரும் செய்திகள் கவலையளிக்கிறது. கடந்த 10 ஆம் தேதி 5,989 ஆக இருந்த தொற்று தற்போது மூன்று மடங்கை தொடும் அளவுக்கு பரவுகிறது. ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகின் முதல் நாடாக வந்திருப்பது இன்னொரு பக்கம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.


கொரோனா முதல் அலையின் அனுபவங்கள் மூலம் தொலைநோக்குத் திட்டத்தை தயாரிக்க தவறியதே இரண்டாம் அலையின் தாக்குதல் தீவிரமானதற்கு காரணம். ஆக்ஸிஜன், தடுப்பூசி கையிருப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட வேண்டும்.


மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை. எனவே, இடைக்கால அரசு இருக்கும் ஒரு வாரத்தில், கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுங்கள்” என்றுள்ளார்.