இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுகை மீனவர்கள் 69 பேரையும், அவர்களது 10 படகுகளையும் இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு அத்து மீறி சிறைப்பிடித்துச் சென்றது.

முக்கியமாக, “கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஒவ்வொருவரின் கையையும் உயர்த்தி நிற்கச் செய்து, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர், கிருமி நாசினியை பீய்ச்சி அடித்திருக்கிறார்கள்.

மிக முக்கியமாக, “வீடு, கட்டடம், வாகனம், மேஜை உள்ளிட்ட உயிரற்ற பொருட்கள் மீது தெளிக்கக்கூடிய இந்த கிருமி நாசினியை, மீனவர்கள் மீது பீய்ச்சி அடித்தது அப்பட்டமான மனித உரிமை மீறலில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி கொரோனா தொற்று வைரஸ் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட இது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது கிடையாது. 

ஆனால், இதற்கெல்லாம் மாறாக, அத்து மீறி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இழிவுப்படுத்தும் விதமாக, இலங்கை கடற்படையினர் இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார்கள், தமிழக மீனவர்கள் சங்கம் மிக கடுயைமாக கண்டித்து இருக்கிறது.

இது தொடர்பாக தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “இலங்கை கடற்படையின் இந்தச் செயல், உலக சுகாதார நிறுவனத்தின் வழி காட்டுதல்களை மீறிய கொடுர செயல்” என்று, வன்மையாக கண்டித்தார்.

“இந்த மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை கடற்படையின் இந்த கொடூர செயலுக்கு, சர்வதேச மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் ஆவேசத்தோடு தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “உலக சுகாதார நிறுவனம் இதற்கு உரிய கண்டனத்தை வெளியிட வேண்டும் என்றும், இதில் ஈடுபட்டோர் மீது இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.

“இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்க இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்” என்றும், தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ, தெரிவித்தார்.