பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, குத்தி கொலை செய்த மகளை போலீசார் கொலை செய்த நிலையில், அவரை வழக்கிலிருந்து முற்றிலுமாக போலீசார் விடுவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த உள்ள அவலூர் பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதான வெங்கடேசன் என்பவர், தன்னுடைய மனைவி இறந்த நிலையில், தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

வெங்கேடசனின் மூத்த மகள் சென்னையில் உள்ள பிரபல துணி கடையில் வேலை செய்து வருகிறார். இதனால், அவரது 2 வது மகள் அவலூர் பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனால், அவர் தனது தந்தையுடன் தங்கியிருந்து வந்தார்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்காக வெங்கடேசன் மேல்மலையனூர் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி உள்ளார். 

அப்போது, வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த 12 ஆம் வகுப்பு படித்து வரும் அவரது மகள், தற்காப்புக்காக வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்தி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

அதன் படி, வீட்டில் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சடலமாகக் கிடந்த அவரை, வெங்கடேசனின் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்குள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து வரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கா முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில், வெங்கடேசனின் 2 வது மகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “எனது தந்தை எனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால், வேறு வழியின்றி தற்காப்புக்காக நான் அவரை கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து, அந்த சிறுமியை கைது செய்த போலீசார். மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். 

மேலும், இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, “தற்காப்புக்காகச் சிறுமி, தனது தந்தையை கொன்றுள்ளதால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுக்க” அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து, தந்தையை கொலை செய்த சிறுமி விடுவிக்கப்படுகிறார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.