பென்னாகரம் அருகே மாமனார் அடிக்கடி மருமகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததைப் பார்த்த மகன், தந்தையை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் எம்.கே.நகரைச் சேர்ந்த 75 வயதான முனியப்பன் என்பவருக்கு 6 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். முனியப்பனின் மனைவி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், அப்போது முதல் அவர் மட்டும் கடந்த 20 ஆண்டுகளாகத் தனிமையில் தான் வசித்து வருகிறார்.

இதனிடையே, முனியப்பனின் 8 பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி அவர்கள் அனைவரும் தற்போது தனித் தனியாக வசித்து வருகின்றனர். 

இதில், முனியப்பனின் 4 வது மகனான 45 வயதான வேலன் என்பவருக்குக் குழந்தை இல்லை. இதனால்,  முனியப்பன் அவர் வீட்டில் தினமும் சாப்பிட்டுவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனி குடிசை வீட்டில் முனியப்பன் வசித்து வந்துள்ளார்.

அத்துடன், 45 வயதான 4 வது மகன் வேலனுக்கு தினமும் குடித்து விட்டு வரும் பழக்கம் இருக்கிறது. இதனால், நாள்தோறும் இரவில் குடித்து விட்டு வரும் அவர், வீட்டிற்கு வந்ததும் கவுந்தடிச்சு படுத்துத் தூங்கி விடுவார் என்று கூறப்படுகிறது.

இதில், முனியப்பனுக்கும் அவரது மருமகளுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வேலன், தன் தந்தை மற்றும் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளத் தொடர்பை கை விடாமல், தொடர்ந்து உள்ளதாகத் தெரிகிறது.

இதனால், சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்தை வீட்டிற்கு வந்த வேலன், அங்குத் தந்தை முனியப்பனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வேலன், அங்குக் கிடந்த கட்டையால் தந்தையை அடித்தே கொன்றுள்ளார்.

பின்னர், போதையில் அங்கேயே தூங்கி உள்ளார். தூங்கி எழுந்ததும் தந்தையை அவர் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார்  முனியப்பனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், தந்தையைக் கொலை செய்த வேலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், மருமகளுக்கும் - மாமனாருக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பு தெரிய வந்தது.

மேலும், “என் அம்மா இறந்தது முதல் என் தந்தை தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். அத்துடன், எனக்கும் குழந்தை இல்லை. இதனால், தந்தை கஷ்டப்படுகிறாரே என்று, அவரை பாவப்பட்டு, தன் வீட்டில் சாப்பிட்டுக்கொள்ளும்படி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொன்னேன். அது முதல் என் தந்தை என் வீட்டில் தான் சாப்பிட்டு வந்தார். அப்போது தான், என் மனைவிக்கும் அவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாகப் பல முறை எச்சரிக்கை விடுத்தும், அவர்கள் இதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளனர். இதனால், ஆத்திரத்தில் அவரை அடித்துக்கொன்றேன்” என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, மருமகளுடன் மாமனார் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், நேரில் பார்த்த மகன், தந்தையை அடித்தேக் கொன்ற சம்பவம், பென்னாகரம் அருகே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.