சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இதனையடுத்து, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலானை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அசோக் நகர் மகளிர் போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, ராஜகோபாலனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் அனுமதி பெற்றனர்.

இந்த விசாரணையின் போது, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் நூற்றுக்கணக்கான கேள்விகளைத் துருவி துருவி கேட்டு விசாரணை நடத்தினர். 

முக்கியமாக, 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்குப் பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதில், சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கும்படி போலீசார் கூறியதாகவும் தெரிகிறது.

குறிப்பாக, “பாலியல் புகார்கள் அனைத்தும் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா? 
மாணவர்களுக்கான வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? 
அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்தினீர்கள்?  
மாணவிகளுக்கு சினிமா ஆசைகாட்டி என்ன மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்?
எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்?”
- என்று, போலீசார் சரமாரி கேள்விகள் கேட்டு கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

ராஜகோபாலனிடம் நடத்திய இந்த விசாரணை அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளனர். 

இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை சூம் zoom செய்து, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

2 நாட்கள் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ராஜகோபால் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாகத் தாக்கல் செய்ய இருப்பதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் மூலமாக ஆசிரியர் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் ஜுன் 4 ஆம் தேதியான இன்று பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் காவல் துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு இன்று காலை 11 மணி அளவில் ஆசிரியர் ராஜகோபால், பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி, முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்கச் சம்மன் அனுப்பி உள்ளதும்  குறிப்பிடத்தக்கது.