கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மிக தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. இப்படியாக, தமிழகம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இந்த கன மழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் மிக கடுமையான அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது.

இந்த சூழலில் தான், நேற்று முன் தினம் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

அதன்படி, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இப்படியாக பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன், “தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர், மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிக கன மழை பெய்யும்” என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை மீண்டும் கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த கன மழை பெய்யும் அளவை பொருத்து மற்றும் அதன் மழைக்கால பாதிப்பை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். 

குறிப்பாக, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இன்றைய தினம் தமிழகத்தில் தற்போது வரை 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி,  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தஞ்சை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். 

அத்துடன், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டார். 

மேலும் கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஒரு பக்கம் கன மழை பெய்து வந்தாலும், இன்னொரு புறம் அதுவும் வேலூர் அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதன்படி, இன்று அதிகாலை 4.17 மணிக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, இந்த நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்றும், ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.