முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சென்னை புழல் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் கடந்த மாதம் (அக்டோபர் 9) வெளியே வந்திருந்தார். துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளனை, அவரின் தாயார் அற்புதம்மாள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எனினும், கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக மகனைக் கட்டித்தழுவி வரவேற்க முடியவில்லையே என்கிற மனவருத்தம் அற்புதம்மாளின் முகத்தில் தெரிந்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ``உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்தில் இவ்வளவு பேரைச் சந்திப்பது, ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத்தான். சிறுநீரகத் தொற்று காரணமாக, என் பையனுக்குத் தொடர்ந்து வைத்தியம் நடந்துக்கிட்டிருக்கு. கொரோனா காலகட்டத்துல அவனுக்குத் தொடர்ந்து வைத்தியம் பார்க்கப்படலை. ஸ்டான்லி மருத்துவமனைக்கோ, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கோ போகும் சூழ்நிலையும் இல்லை. என் புள்ளைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைச்சலா இருக்கறதுனால பரோல் கேட்டு மனு போட்டேன். இந்த ஆறு மாசமா மாத்திரை, மருந்துகூட அவன் எடுத்துக்கலை.

இந்த வழக்கில் சட்டத்தை மீறித்தான் ஏழு பேரும் தண்டிக்கப்பட்டிருக்காங்க. நாங்க அதிகாரமற்றவங்க. எங்களால என்ன செய்ய முடியும்... கேட்கத்தான் முடியும். அவன் இளமைக் காலம் போயிடுச்சு. அவன் வாழ்க்கையை யாராலும் திருப்பிக் கொடுக்க முடியாது. வாக்குமூலம் வாங்கின அதிகாரி முதல் தீர்ப்பு சொன்ன நீதிபதி வரை பேரறிவாளன் நிரபராதினுதான் சொல்றாங்க. ஆனாலும், அவன் தொடர்ந்து சிறையிலதான் இருக்கான். அமைச்சரவை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சபை. அவர்கள் சேர்ந்துதான் விடுதலை செய்யலாம்னு ஆளுநருக்கு கோப்பு அனுப்பினாங்க.

அது என்ன ஆச்சுன்னு, தீர்மானம்போட்ட அமைச்சரவையில இருக்கறவங்கதான் கேட்கணும். அவங்க யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க. அந்த அம்மா எனக்கு வாக்குறுதி கொடுத்தாங்க. `உன் பையனை உன்கிட்ட சேர்க்கிறேன். வருத்தப்படாதே... அழாதே...’னு சொன்னாங்க. நிச்சயமா அந்த அம்மா என் பையனைக் கொண்டு வந்து சேர்த்துடுவாங்கனு நான் நம்பிக்கையா இருந்தேன். ஆளுநரைச் சந்திக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலை. அரசாங்கம் சொல்லுதே தவிர, செயல்படுத்தலை. இனியாவது என் புள்ளைய வாழ விடுங்க’’ என்று கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்க்கது. 

இந்த தீர்மானம், அப்போதே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் மீது ஆளுநர் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையில், தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட்டது.
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (நவம்பர் 3) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் 2 ஆண்டுகளாக கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், ``பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் முடிவு செய்து உத்தரவிட வேண்டும் என விரும்புகிறோம்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்நோக்கு விசாரணைக்குழு அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.