மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
 
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி உரிய பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றங்கள்கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்பட தொடங்கிவிட்டன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பின் மூலம் திட்டமிட்டபடி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகள் நடைபெறுவது உறுதி ஆகி உள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், ``தேர்வு ஒத்தி வைக்கப்பட்டால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக்க மாணவர்களின் தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம் என்றும், நிதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ``வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை திறக்க கோருகின்றீர்கள். ஆனால், மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்யவும் கோருகிறீர்கள். தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த மனுதாரரான வழக்கறிஞர் அலக் அலோக், ``கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் பணி நடைமுறையில் உள்ளது. எனவே தான் தேர்வை காலவரையறையின்றி ஒத்திவைக்க விரும்பவில்லை" என்று கூறினார். ஆனால், நீதிபதிகள் இந்த வழக்கு தேவையற்றது என்று குறிப்பிட்டனர். மேலும் அவர்கள், ``வாழ்க்கையின் ஓட்டத்தில் பயணிக்க பழகுங்கள். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக செயல்படத் தொடங்கிவிட்டது" எனக்கூறி, அதை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஜெ.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை 2020ஆண்டு ஒத்திவைக்க 11 மாநிலங்களை சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் ஜூலை 3 தேர்வை ரத்து செய்துவிட்டு செப்டம்பர் மாதம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி என்.டி.ஏயின் பொது அறிவிப்பின் படி ஜெ.இ.இகான தேர்வு செப்டம்பர் 1-6ஆம் தேதிக்குள் நடக்க இருக்கிறது. மேலும், நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் ஜெ.இ.இ மற்றும் நீட்தேர்வுகள் தற்போது நடத்துவதால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த இக்கட்டான காலம் முடிந்த பின்னர் தேர்வுகள் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக ஜெ.இ.இ மற்றும் நீட்தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது